SK
நவம்பரும் டிசம்பரும் அடியேனும் அப்படின்னு ஒரு பதிவு எழுதி எனக்கும் நவம்பருக்கும் டிசம்பருக்கும் உள்ள பயத்தை சொல்லி இருந்தேன். நிறைய நண்பர்களின் அன்பும், வேண்டுதலும், ஆண்டவனின் கருணையும் இந்த நவம்பர் டிசம்பர் நல்ல படியாகவே சென்றது ஒரு இரண்டு நாட்கள் வம்பைத்தவிர. அதோடு இந்த டிசம்பர் மாதம் பல வாழ்க்கை பாடங்களை கற்றுத்தந்தது அப்படின்னு சொன்னா அது மிகையே இல்லை.

கடந்த ஒரு நாலு நாட்களுக்கு முன் இவரை பார்க்கும் வரை மண் போல இருந்த என் பிரச்சனைகளை மலை போல நினைத்து இருந்தேன். இவரை சந்தித்த பிறகு, இவருடன் சற்று பேசிய பிறகு, இரண்டு நாட்கள் இவருடன் செலவிட்ட பிறகு நான் என்னுடைய முன்னாள் பதிவான நவம்பர் டிசம்பர் பதிவை நினைச்சு வெட்க படுகிறேன். யார் இவர் ? அப்படி என்ன சொல்லிட்டார் ? அப்படி என்ன செய்யறாரு ?

கடந்த பத்து ஆண்டுகளாக ஜெர்மனியில் மாஸ்டர்ஸ் முடித்து விட்டு இப்போது Ph.D. படித்து கொண்டு இருக்கிறார். இவருக்கு வயது 43. 2010இல் படிப்பை முடித்து விடுவேன் என்று கூறுகிறார். ஜெர்மனியில் எங்கும் தனியே பயணம் செய்கிறார், யாரும் எதற்கும் உதவி இல்லை. உலக விடயங்கள் அனைத்தும் விரல் நுனியில். ஜெர்மன் மொழிப்புலமையும் அருமை. தனது Ph.D. தீசிசையும் ஜெர்மன் மொழியில் தான் எழுதி வருகிறார். இவருக்கு கடந்த பத்து ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை என்று எதுவும் இல்லை. இங்கு மாணவர்கள் வேலை பார்க்கலாம் என்று இருக்கும் சட்ட விதிக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அப்படி வேலை செய்து தனக்கு தேவையான பணத்தை சம்பாதித்துக் கொள்கிறார். இது எல்லாம் என்ன பெரிய விடயமா என்று நினைப்பவர்களுக்கு, ஆம், இவை அனைத்தும் பெரிய விடயமே. இரண்டு கண்ணும் தெரியாதவருக்கு.

பிறவியில் இருந்து கண் பார்வை இல்லை என்றால் அது ஒரு வித கடினம். இவருக்கு 21 வயது வரை கண் பார்வை இருந்து உள்ளது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வை முழுதும் இல்லாமல் போய உள்ளது. இவரது தன்னம்பிக்கையும், மொழிப்புலமையும், அனைத்தையும் தானே செய்து கொள்ளும் மனப்பக்குவமும் கண்டு வெட்கப்பட்டு நின்றேன்.

இவரை பற்றிய சில குறிப்புகள்.

அ. தன்னுடைய கணினியில் தானே அனைத்து வேலையும் செய்கிறார். அதற்கு தனியாக ஒரு வாய்ஸ்/ஆடியோ உதவி செய்யும் ஒரு மென்பொருள் வைத்து உள்ளார். எங்கு எதை சேமித்தோம் என்று தெளிவாக நினைவில் கொள்கிறார். (நானு ஒரு கோப்பை எங்கே சேமித்தேன்னு ஒன்பது மணி நேரம் தேடி இருக்கேன் )

ஆ. உணவு : தினமும் காலையில் பிரட்/பட்டர், மதியம் - இங்கு உள்ள கல்லூரி உணவு விடுதிகளில், இரவு இரண்டு பழங்கள். கடந்த பத்து ஆண்டுகளாக இதே வழி முறையை பின் பற்றுகிறார் (நானு சாம்பார்ல உப்பு கம்மி, ரசத்துல புளிப்பு அதிகம்னு குறை சொல்லிக்கிட்டு இருக்கேன்)

இ. எந்த பேருந்து எங்கு நிற்கும், எத்தனை மணிக்கு வரும், எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளார். ரயில் நிலையங்களில் யாரிடமேனும் உதவி கேட்டு அதற்கு தேவையான வண்டிகளை பிடித்து செல்கிறார். தன்னுடைய கடிகாரத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் அது மணியை சொல்கிறது. அனைத்தையும் சரியாக முறையாக செய்கிறார்.

ஈ. வார இறுதி நாட்களில், பக்கத்து ஊர்களுக்கு சென்று மொழிபெயர்ப்பு வேலை செய்து தனது செலவுக்கு தேவையான பணத்தை சம்பாதித்து கொள்கிறார். (அஞ்சு வருஷமா இன்னும் சரியா நான் மொழி கற்றுக்கொள்ளவில்லை)

உ. உலக விடயங்கள் அனைத்தும் விரல் நுனியில். எப்படி சார் அப்படின்னு கேட்டா '21 வயசு வரைக்கும் IFS யில் சேர வேண்டும் அப்படின்னு என்னை நானே தயார் படுத்திகிட்டேன், கண் பார்வை போனதினால் முடியவில்லை' அப்படின்னு சிரிச்சுகிட்டே சொன்னார். (எனக்கு தெரிஞ்ச போது அறிவு எங்க அப்பாவும் அண்ணனும் சாப்பிடும் போது இலைல ஒக்காந்து கிட்டு பேசறதை நான் கேட்பது தான் )

இவரை கண்ட பிறகு என் பிரச்சனைகள் அனைத்தும் எனக்கு மண் போலத்தான் தெரிந்தது. என்னுடைய நவம்பர் டிசம்பர் பதிவை படிச்சு ஊரே சிரிப்பது போல இருந்தது. இந்த டிசம்பர் எனக்குள் பல உத்வேகத்தையும்/ நம்பிக்கையையும் கொண்டு வந்துள்ளது.

இதோ ஒரு புதிய ஆண்டு பிறக்கிறது. இவர் கொடுத்த நம்பிக்கையும், இனி என் வாழ்வில் எதற்காகவும் சோர்ந்து இருக்க கூடாது என்ற பாடத்தை கொடுத்தது. இவர் மன தைரியமும், வெற்றியும் பெற என் வாழ்த்துக்கள்/பிரார்த்தனைகள். உங்கள் அனைவரின் பிராத்தனையும் அவருக்கு நிச்சயம் தேவை.

இன்றில் இருந்து இனி பொலம்ப மாட்டேன். என் பிரச்சனைகளை தைரியமாக எதிர் கொள்வேன். அதற்கான நம்பிக்கையுடன் இருக்க அனைத்து முயற்சியும் செய்வேன். இதற்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டும். நண்பர்களின் அன்பும் வேண்டும்.

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

அன்புடன்
எஸ். கே.
11 Responses
  1. அப்பாடா! வலைப்பூ பேரும் மாறிடுமா?
    உங்க ஃப்ரண்ட் க்ரேட்


  2. :)))

    என்ன சொல்றதுன்னே தெரியல சகா


  3. SK Says:

    கபீஷ், அது என்ன அப்படா, வலைப்பூ பேரு மாறிடுமா.. இது சந்தோஷமா துக்கமா ?? :-) வலைப்பூ பேரு மாறாது.

    சகா, நானும் ஒரு ரெண்டு நாள் பேச முடியாமத்தான் இருந்தேன்.


  4. உங்க நண்பரை நினைச்சா பெருமையாவும் ஆச்சரியமாவும் இருக்கு.


  5. அருமையான பதிவு . உங்கள் நண்பருக்கு என்வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்


  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் SK


  7. ஒரு பிரபல தமிழ்பாடலில் வந்த பாடல்வரிகள் தான் இந்த பதிவு படித்தபின் ஞாபகத்துக்கு வந்தது எஸ்.கே

    “கண்ணிழந்த பேர்கள் காணும் உண்மை, கண்ணிருக்கும் பேர்கள் காண்பது இல்லை”

    :)

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எஸ்.கே


  8. புத்துணர்ச்சியூட்டும் பதிவு!


  9. Deepa Says:

    Excellent :Kannai thirandhadharkku nandri :)


  10. SK Says:

    நன்றி நவாசுதீன், தென்றல், தாரணி பிரியா, அமித்து அம்மா, அன்புடன் அருணா, Dewdrop

    இன்று தினமலரில் இதே போன்று ஒரு செய்தி படித்தேன்.